Tuesday, June 30, 2009

முத்தம்...



எனக்கு கோவம் கோவமா வருது.. ஏன் அவ இப்படி பண்ணினா?


அவளுக்கு நல்லா தெரியும் என்னை பாக்கும்போதும் பிரியும் போதும் முத்தம் குடுக்காம இருந்தா நான் ரொம்ப வருத்த படுவேன் என்று. மறந்துட்டா... அதெப்படி மறக்கலாம்...


இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இன்னக்கி ஒரு நாள் தானே மறந்தா அப்படின்னு அறிவு சொனாலும் மனசு கேக்கவே மாட்டேங்குது.. எப்போவும் ட்ரொப் பண்ணும் போது எந்த இடமா இருந்தாலும் சரி.. எத்தனை பேர் இருந்தாலும் சரி... கட்டி பிடிச்சி முத்தம் குடுத்துட்டு தான் போவா.. ஒரு சில நேரம் எனக்கே 'என்ன இவ்ளோ முத்தமான்னு' தோணும்.. ஆனாலும் ரொம்ப பெருமையா இருக்கும்.


மனசு ஆறவே மாட்டேங்குது.. சாயங்காலம் பிக் பண்ணும்போது கவனிச்சிக்கறேன். இன்னக்கி சண்டை தான் போட போறேன்.


என்ன தான் ட்ரை பண்ணினாலும் வேலையில் மனசே ஒட்ட மாட்டேங்குது. மனசெல்லாம் 'அவ எப்படி மறக்கலாம்' னு மட்டும் தான் தோணிட்டு இருக்கு. எப்படியோ சாயங்காலம் பிக் பண்ணற நேரம் வரை கஷ்ட பட்டு நேரத்தை தள்ளிட்டேன்.


இப்போ அவள பிக் பண்ண போறேன்...


அவள் எனக்காக காத்திருக்கிறாள்.


நான் கொஞ்சம் கோவமாவே அவளை நோக்கி போனேன். அவ என்ன பாத்ததும் ஓடி வந்தாள்.


முன்னாடி இருந்தா கோவம் கொஞ்சம் கொறஞ்சிருக்கு தான். இருந்தாலும் கொஞ்சம் கோவம் இருக்கு.,


ஓடி வந்த அவ என்ன கட்டி புடிச்சி ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தம் கொடுத்தா.. 'மோர்னிங் மறந்துட்டேன் சாரி '.. என்றாள் என் ஐந்து வயது செல்ல மகள்...







1 comment:

  1. அருமையான எழுத்து நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete