Thursday, May 7, 2009

ஆசை மேல் ஆசை... -கவிதை

மாசற்ற மழலையாய்

மகிழ்ந்திருந்த நேரத்தில்

தள்ளி விழுந்த பந்தெடுக்க

தவழ்ந்திட ஆசை ..



அழகழகாய் தவழ்ந்தோட

ஆரம்பித்த அந்நாளில்

அடி மேல் அடி எடுத்து

அதிர்ந்து நடக்க ஆசை ..



தத்தி தடுமாறி

தடம் பதிக்கும் நாட்களில்

பெரிய அண்ணன் அக்கா போல

பாய்ந்தோட ஆசை ...



ஆடி ஓடி விளையாடி

ஆர்ப்பரிக்கும் வேளையில்

புத்தக பை தூக்கி

பள்ளி செல்ல ஆசை ..



புத்தகங்கள் கனம் பார்த்து

பயந்திருந்த சமயத்தில்

வேலை செல்லும் பெரியவர் போல்

வீறு நடை போட ஆசை ..



இன்று விடியலில் எழுந்து

இமைக்காது உழன்று

இல்லை என்பதில்லாத

இந்நிலையில் இருக்கையில் ..



பளிங்கு நிலா காட்டி

பாலூட்டிய அன்னையும் ..

விழுந்து எழுந்து நடை பயில

வேகம் தந்த தந்தையும்..



பால் மணம் மாறாத

பசுமையான மனமும்..

நாளைய நாளை பற்றி நினையாத

நல்லினிய நிலையும் ..



திரும்பி கையில் கிட்டாதா

தினம் இனிமை சேராதா ..

இதுவரையில் ஆசைப்பட்டது

இம்மெனும் முன் நடந்தது ..



இத்தனை தூரம் கடந்த பின்

இன்று வந்த இந்த ஆசை ..

எத்தனை கொடுத்தாலும்

எந்தனுக்கு கிட்டிடுமா ??








No comments:

Post a Comment