Wednesday, July 15, 2009

நண்பனே!!

எனக்கும் உங்களுக்கும் எல்லாருக்கும் நண்பர்கள் இருக்காங்க.. அதிலே உயிர் நண்பர்கள்... சும்மா பேச்சு துணை நண்பர்கள்... அப்படி இப்படின்னு நிறையா வகை இருகாங்க.. நண்பர்கள்ளே கெட்டவங்க கிடையாது.. அதானலே வேணும்னா நம்பத்தகுந்த நண்பர்கள்... நம்ப தகாத நண்பர்கள் ன்னு சொல்லலாம்.



உக்காந்து இருந்து யோசிச்துலே தோணினது...





ஒரு நலல நண்பன்......











-மௌனத்தையும் மொழி பெயர்ப்பான்.
















-துன்பத்தில் தோள் கொடுப்பான்...
துணிந்து நின்று உயிர் கொடுப்பான்...

















தட்டு தடுமாறி, விழி பிதுங்கி, பயந்து கட்டுண்டு இருக்கும்போது


தழுவி துணிச்சல் தந்து வீறு கொண்டு எழ செய்வான் ....





அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எவனெவன் என்னென்ன சொன்னாலும் ...

உன்னை எனக்கும் என்னை உனக்கும் தெரியும் என்பான்...





கோபங்கள்... பேதங்கள்... வாக்குகள்... வாதங்கள்....
தருவது தெளிவு தானே தவிர பிரிவு இல்லை...




நல்ல நண்பனால் இதயத்தை உடைக்க முடிந்தாலும்...


நட்பை உடைக்க முடியாது...





Sunday, July 5, 2009

தோழியா... காதலியா... அன்பே!!!


சரவணன் க்கு 5 மணிக்கி இந்தியா க்கு flight .அம்ஸ்டேர்டம் ஏர்போர்ட் இல் காத்திருக்கிறான். 3 வருடத்திற்கு பிறகு இப்போது தான் இந்தியா போகிறான். மனைவி லட்சுமி யும் , மகன் சரசு வும் முந்தைய வாரம் போய்விட்டார்கள். இன்னும் boarding க்கு 3 மணி நேரம் இருக்கிறது. சரி பொழுது போக்கலாம் என்று பக்கத்தில் ஒரு duty free ஷாப் க்குள் நுழைந்தான். ' barbie dolls half price' 'offer ends today' என்று போட்டிருப்பது பார்த்து அதை நோக்கி போனான். சரசு வுக்கு பார்பீ பொம்மை என்றால் கொள்ளை பிரியம். ஏற்கனவே 4,5 வைத்திருந்தாலும், என்ன வேண்டும் என்று கேட்டால் பார்பி என்று தான் இன்னும் சொல்வாள். அப்படி ஒருமோகம் அதன் மேல. குழந்தையை நினைத்து மெல்லிய புன்னகை அரும்பியது அவன் உதடுகளில்.

அவனது என்ன ஓட்டங்கள் திடீரென்று சடன் பிரேக் போட்டது. 'அது யார்.... ???'..
ஒரு நிமிடன் அவன் உடலெங்கும் ஒரு உஷ்ணம் பரவியது. சந்தேகமே இல்லை அது வினிதா தான். அவன் வினி..

தடைகளை தாண்டி அவன் எண்ண குதிரை பத்து வருடதிற்கு பின்னே ஓடியது. அவனும் வினியும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு வகுப்பில் இருந்தார்கள். அவள் அப்படி ஒரு அழகு.

'நீ வெயிலில் போகும்போது
உன்னை பார்க்க கண் கூசியதால்
திரும்பி சூரியனை பார்க்கிறேன்...

உன்னை அமாவாசை இருளில் பார்த்தேன்
எனக்கு இப்போது தான் புரிகிறது..
அமாவாசை அன்று ஒரு நிலவு
மீதி இரவில் இரண்டென்று...

பக்கத்து வீட்டு தாய்
நிலாநிலா ஓடி வா என்று கூறி சோறூட்டினாள்
நிலத்தை காட்டி..
அங்கு நோக்கினேன்... நீ...
'

நான்கு வார்த்தை சேர்த்து எழுத தெரியாத சரவணன் எழுதியது தான் இது. இதை விட அழகாக அவன் நண்பர்கள் பலர் அவளுக்காக எழுதியிருப்பது அவனுக்கு தெரியும்.

ஆனால் வேறு யாருக்குமே கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்தது.. அவளது நட்பு... அவள் காலை எழுந்திருபதிலிருந்து இரவு தூங்குவது வரை முழு நேரமும் அவனுடன் தான் இருப்பாள். ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அவனிடம் முதலில் சொல்லா விட்டால் அவளுக்கு தலையெவெடிதுவிடும்.. அவனும் நல்ல நேரம் பார்த்து தான் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தான்.. அவன் கெட்ட நேரமோ என்னவோ அந்த நல்ல நேரம் வரவே இல்லை. இருவரும் கடைசி வருடம் படிக்கும்போது இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று ஒரு வழியாக சொல்லிவிட்டான்.

அவள் ... 'சரவ்... என்னால் உன்னோட தோழியா தான் இருக்க முடியும். உன்னை வேறு எதுவாவுமே என்னால் பாக்க முடியாது... சாரி.. ' என்றாள். அதன் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை. அவனால் அவளை தோழியாக பார்க்க முடியவில்லை. இரண்டு தடவை தற்கொலைக்கு கூட முயன்றான்.. எதோ அதிஷ்ட வசமாக தப்பினான். பிறகு... பெற்றோர் ஒரே பையன் நீ இப்படி பண்ணலாமா என்று அழுது... பிறகு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... அம்மா உடல் நல குறைவு... பல இண்டேர்விஎவ்கள் ... நல்ல சாப்ட்வேர் கம்பனியில் வேலை... திருமணம்.. குழந்தை... கால ஓட்டத்தில் எல்லாமே மறதுவிட்டிருந்தது... ம்ம்ம்...

பயணிகளை விமானத்தில் நுழைய அறிவிப்பு கேட்டு நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்வுக்கு வந்தான். பாஸ்போர்ட் செக் முடிந்து அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான். ஜன்னல் ஓர இருக்கை. அருகில் உள்ள இருக்கையில்...... வினிதா.... இதை அவன் எதிர்பார்கவே இல்லை..

'சரவணன்??'
'எஸ்! வினிதா??'
'எப்படி இருக்கீங்க?? சர்ப்ரைஸ்.. '...வாடா போடா என்று நிமிஷத்துக்கு நூறு முறை சொல்லும் வினி..
'டூஇங் கிரேட்!! நீங்க??' ..வினி.. வினி.. என்று உருகும் சரவணன்..
'நல்லா இருக்கேன்..'

அவள் கணவன் குழந்தை பற்றி சுருக்கமாக சொன்னாள்.
அவனும் மனைவி குழந்தை பற்றி சொன்னான்...

அதன் பிறகு அவன் கண்ணயர்ந்தான்.. அவன் எதோ படம் பார்த்து கொண்டிருந்தாள்..

அவன் மனதில் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.. தான் யாருக்காக இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தோமோ அவள் அருகில் இருக்கிறாள்.. கோபம்.. விரோதம்... ஆசை.. அழுகை... எதுவுமே இல்லை... சொல்ல போனால் மனம் தெளிந்த நீரோடை போல ரொம்பவுமே அமைதியாக இருந்தது... அவளிடம் பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை... இப்போது அவள் அவனுக்கு தோழியா... காதலியா.. தெரியவில்லை... பத்து வருடம் செய்த வைத்தியமா இது?? காலம் இப்படி ஒரு மருந்தா??? அன்று தான் பைத்தியம் போல் அலைந்ததை நினைத்தால் கொஞ்சம் வியப்பாக கூட இருந்தது...

'உயிர்... அதை எவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டேன்.. ஒரு வேளை அப்போது செத்திருந்தால்.... வாழ்வில் எவ்வளவோ இழந்திருப்பேன்... '

'நேற்று தேவை என்றது இன்று தேவை இல்லை...
நேற்று வாழ்கை என்றது இன்று வாழ்கை இல்லை..
நேற்று உயிர் என்றது இன்று உயிர் இல்லை.....'

அந்த ஒரு நிமிடத்தில் புரியாதது அதை கடந்து வந்த உடன் புரிகிறது..

விமான நிலையத்தில் சரசு வும் லட்சுமியும் காத்திருந்தார்கள்.... தன்னை அறியாமல் அவன் மனதில் மகிழ்ச்சி புகுந்தது..

'ஒரு வாரம் ஆச்சி பாத்து... ' குழந்தை ஓடி வந்து கட்டி கொண்டாள். மனைவி 'ரொம்ப டயெர்ட் எ இருக்கீங்க'....

'இவர்களை பிரிந்து எப்படி ஒரு வாரம் இருந்தேன்....'



நல்ல நண்பன்





Tuesday, June 30, 2009

முத்தம்...



எனக்கு கோவம் கோவமா வருது.. ஏன் அவ இப்படி பண்ணினா?


அவளுக்கு நல்லா தெரியும் என்னை பாக்கும்போதும் பிரியும் போதும் முத்தம் குடுக்காம இருந்தா நான் ரொம்ப வருத்த படுவேன் என்று. மறந்துட்டா... அதெப்படி மறக்கலாம்...


இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இன்னக்கி ஒரு நாள் தானே மறந்தா அப்படின்னு அறிவு சொனாலும் மனசு கேக்கவே மாட்டேங்குது.. எப்போவும் ட்ரொப் பண்ணும் போது எந்த இடமா இருந்தாலும் சரி.. எத்தனை பேர் இருந்தாலும் சரி... கட்டி பிடிச்சி முத்தம் குடுத்துட்டு தான் போவா.. ஒரு சில நேரம் எனக்கே 'என்ன இவ்ளோ முத்தமான்னு' தோணும்.. ஆனாலும் ரொம்ப பெருமையா இருக்கும்.


மனசு ஆறவே மாட்டேங்குது.. சாயங்காலம் பிக் பண்ணும்போது கவனிச்சிக்கறேன். இன்னக்கி சண்டை தான் போட போறேன்.


என்ன தான் ட்ரை பண்ணினாலும் வேலையில் மனசே ஒட்ட மாட்டேங்குது. மனசெல்லாம் 'அவ எப்படி மறக்கலாம்' னு மட்டும் தான் தோணிட்டு இருக்கு. எப்படியோ சாயங்காலம் பிக் பண்ணற நேரம் வரை கஷ்ட பட்டு நேரத்தை தள்ளிட்டேன்.


இப்போ அவள பிக் பண்ண போறேன்...


அவள் எனக்காக காத்திருக்கிறாள்.


நான் கொஞ்சம் கோவமாவே அவளை நோக்கி போனேன். அவ என்ன பாத்ததும் ஓடி வந்தாள்.


முன்னாடி இருந்தா கோவம் கொஞ்சம் கொறஞ்சிருக்கு தான். இருந்தாலும் கொஞ்சம் கோவம் இருக்கு.,


ஓடி வந்த அவ என்ன கட்டி புடிச்சி ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தம் கொடுத்தா.. 'மோர்னிங் மறந்துட்டேன் சாரி '.. என்றாள் என் ஐந்து வயது செல்ல மகள்...







Saturday, June 27, 2009

எனக்காக!


நான் நினைப்பதை நான் நினைக்குமுன்

நீ நினைத்துவிட்டாய்... எனக்காக!

நான் ரசிப்பதை நான் ரசிக்குமுன்

நீ ரசித்து வைத்தாய்.. எனக்காக!

நான் கலங்குமுன் என் விழிகளில்

நீ நீர் துடைத்தாய்... எனக்காக!

நான் அழுகையில் உன் மடியினில்

நீ சேர்த்தணைத்தாய் ....எனக்காக!

நான் உறங்கையில் என் கனவினில்

நீ இடம் பிடித்தாய்... எனக்காக!

நான் சிரிக்கையில் என் சிரிப்புக்கு

நீ விதை விதைத்தாய் ... எனக்காக!
நான் நினைக்கையில் என் கனவுக்கு

நீ உரு கொடுத்தாய்... எனக்காக!

நான் மறக்கையில் என் உணர்வுகள்

நீ புரிந்திருந்தாய் ...எனக்காக!
நான் பேசையில் என் பேசினில்

நீ மயங்கி நின்றாய்.. எனக்காக!

என் உணர்வினில் என் உயிரினில்

நீ கலந்திருந்தாய்... எனக்காக!
என் மூச்சிருக்கும் வரை நேசித்து

வாழ்ந்திருப்பேன் நான்... உனக்காக!






தாய் அன்பு

அழகான குடும்பம்.... கண்மணி போல ஒரே ஒரு அழகான பெண் குழந்தை.. அழகான பெயர் கூட ... மாலா...


பெற்றோர் என்றால் மாலா - க்கு கொள்ளை பிரியம்... ஆனால் அவள் பெற்றோர்க்கோ அதை விட....


அந்த குழந்தைக்கு பாசத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அந்த பெற்றோர், அருமையான இன்ஜினியரிங் பட்டத்தையும் வாங்கி குடுத்தாங்க.

கல்லூரி நாட்களில் அப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அவளுக்கு...

இப்படியாக இருக்கும் போது, வேலை தேடி பட்டணம் சென்றாள் மாலா.. சின்னதாய் ஒரு வேலையும் வாங்கினாள்.

நாட்கள் கடந்தன........


ஒரு நாள், துடியா துடித்து போனாள் அந்த செய்தி கேட்டு ... எதோ எல்லாம் இழந்ததை போல் நினைத்தாள்...


விதவை தாயை தன்னுடன் வந்து இருக்கும் படி அழைத்தாள் மாலா...


அப்போது தான் மாலா- க்கு பெரிய வேலையும் தேடி வந்தது.. மாதம் 25,000 ரூபாய் ஊதியம்... மாதம் தோறும் ஒரு காரணம் சொல்லி, ஊதியம் முழுவதும் கிடைக்க வில்லை என்பாள் மாலா...

மாலா- க்கு வரன் தேடி அலைந்தாள் அந்த அருமை விதவை தாய்... வந்த எல்லாத்தையும், எதோ காரணம் சொல்லி தட்டி கழித்தாள் மாலா. பல காரணம் சொல்லி அந்த தாய் மனதை புண் படுத்தினாள் மாலா.

முதுமை காலத்தை நிம்மதியாக கடத்த விரும்பிய தாயை, தன்னுடன் அழைக்க மறுத்தாள் மாலா. காரணம் தெரியாமல் தவித்தாள், காரணம் தெரிய துடித்தாள் அந்த தாய்.

தன் வீட்டு போன் ஒலிக்க, ஓடி போய் கேட்ட சேதி , இடி போல இருக்க, உடனே பட்டணம் கிளம்பினாள் அந்த தாய்.

பதட்டத்துடன் வீட்டுக்குள் போன தாய், மண கோலத்துல மாலா... தன் ஆசை காதலனுடன்....

தரைல விழுந்த தாய், இப்போ தன் அருமை கணவனுடன் விண்ணுலகில்.....




Wednesday, June 24, 2009

மஞ்ச பை - கதை

பக்கத்து சீட் காலியாக இருந்தது. 'நல்ல டீசென்டான ஆளா வந்தா சரி. இந்த தடவை flight லேயும் டிக்கெட் கிடைக்கவில்லை. முதல் வகுப்பு ஏசி யிலும் கிடைக்கவில்லை. சரி சாதா ஸ்லீப்பர் லேயாவது கிடைதிருந்தால் பரவாயில்லை என்றால் , அதுவும் கிடைக்கவில்லை. இந்த பஸ் லே தான் கிடைத்தது. கடைசி நேரத்தில் டிக்கெட் வேண்டுமென்றால் என்ன செய்வது.

இன் பண்ணின டி-ஷர்ட் உம சூட்கேஸுமாக ஒரு இளைஞன் வந்தான். ம்ம்.. இவன் கூட பரவாயில்லை.

அவன் என்னை தாண்டி அடுத்த சீட்டுக்கு போய்விட்டான்.

அடுத்தது ஒரு நாகரீக யுவதி ஜீன்ஸ் இல் வந்தாள். ம்ம்.. இவள் கூட பரவாயில்லை.

அவளும் அடுத்த சீட்டில் போய் அமர்ந்தாள்.

அடுத்தது, அழுக்கு வேஷ்டியும், மஞ்சள் பையும் வைத்திருந்த ஒரு நடுத்தர வயதுகாரர்.

அட ஆண்டவா இந்த ஆளா.... வேண்டாமே...

என் கெட்ட நேரம் அந்த ஆள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். இது போதாதென்று என்னை பார்த்து புன்னகை வேறு.

அங்க போய் சேருற வரை இத தாங்கணுமா. கடவுளே....

அந்த ஆள் மேல் படாமல் கொஞ்சம் விலகி உட்கார்ந்தேன்.

போய் சேர்ந்த உடனே குளிக்கணும்...

'உங்க டிக்கெட் காட்டுங்க'. சத்தம் கேட்டு நிமிர்ந்தேன். கண்டக்டர். பாகெட்டில் கை விட்டு டிக்கெட் எடுக்க நினைக்கும்போது தான்... 'ஷிட்.. டேபிள் லே இருந்து டிக்கெட் எடுத்து வைக்கனும்னு நினச்சேன் மறந்துட்டேனே.... ' தட்ஸ் ஆல்ரைட் ... பே பண்ணிடலாம்.

கண்டக்டர்.. நான் டிக்கெட் வீட்டுலே மறந்து விட்டுட்டேன்... எவ்வளவு பே பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிடறேன்...

450 ரூபாய் ங்க...

ஆங்.. என் கெட்ட நேரம்... காஷ் இல்லையே..

கண்டக்டர்.. என்கிட்டே கிரெடிட் கார்டு தான் இருக்கு.......

ஒரு நிமிடம் ஒட்டு மொத உலகமும் என் தலையில் சுற்றுவது போல இருந்தது... இப்படி பணம் இல்லாமல் இந்த மாதிரி ஒரு இடத்தில் இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததே இல்லை. ஐந்நூறு ரூபாயை நான் பெரிதாக நினைத்து கூடஇல்லைநிமிடம் வரை .

பணம் இருந்தா குடுங்க. இல்லன்னா இறங்கிடுங்க. பஸ் கிளம்பற நேரமாச்சி.

என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு முக்கியமான விஷயமாக அவசரமாக போகிறேன். இந்த பஸ் இல் போனால் தான் போய் சேர சரியாக இருக்கும். அடுத்த பஸ் இல் போனால் மிகவும் லேட் ஆகி விடும்.

அந்த தி-ஷர்ட் இளைஞன் 'சீக்கிரம் முடிவு பண்ணுங்க . எங்களுக்கு லேட் ஆகுது.'

எல்லோரும் 'ஆள் பாக்க டீசென்ட் ஏ இருக்க மாதிரி இருக்கு.' என்று முனுமுனுப்பது கேட்டது.

கண்டக்டர்.. இதுலே ஐந்நூறு ரூபாய் இருக்கு.. டிக்கெட் குடுத்துட்டு மீதி குடுங்க ....சொன்னது மஞ்சள் பைகாரர்.

சார்.. அங்க போனதும் atm லே வித்ட்ராவ் பண்ணி தந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ்.

இதுக்கு என்னங்க தேங்க்ஸ்... மனுஷனுக்கு மனுஷன் இது கூட பண்ணலேன்னா எப்படி?

இப்போது விலகி உட்காரவில்லை நான்.



Monday, June 22, 2009

வலி என்னும் போதி மரம்...




வலி... நாம் எல்லோருமே என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு வலியை அனுபவித்திருப்போம்.. அக வலி... புற வலி.. எதாவது ஒன்று.

தாங்க முடியாத வலி! மரண வலி! நம்மில் பலர் இதை கூட அனுபவித்திருப்போம். அப்பப்பா... அந்த நேரத்தில் அது வரை பெரிதாக , முக்கியமாக பட்ட எல்லாமே மறந்து விடுகிறது.. அந்த நிமிட தேவை 'நிவாரணம்'. இதை தவிர வேறொன்றுமில்லை. அந்தஸ்து.. பணம்.. புகழ்.. பதவி.. எதுவுமே ஞாபகம் வருவதில்லை. வலி என்ற ஒன்றை தவிர வேறு எல்லாமே சூன்யமாகி விடுகிறது.

'தாங்க முடியாத வயிறு வலியால் தற்கொலை'. என்றெல்லாம் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் தோன்றும். இதை கூட தாங்க முடியாதா என்று. இப்போது தோன்றுகிறது விலை மதிக்க முடியாத உயிரை விட தயாராகி இருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு துடித்திருபான். எனக்கு தற்கொலையில் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. ஆனால் அந்த செய்திகளை படிக்கும்போது வந்த கோபம் இப்பொழுது இல்லை. இப்பொழுது புரிகிறது. தெளிவாக புரிகிறது.

காதலுக்காக, உணர்வுகளுக்காக சாபவர்களை நினைத்தாலே கோபம் வருகிறது. எல்லோரும் வாதிடலாம் உணர்வு பூர்வமான தோல்விகள் உடல் சார்ந்த வலிகளை விட பெரிதென்று.. ஆனால் அப்படி சொல்பவர்கள் நிச்சயம் இந்த வலியை அனுபவிக்காதவர்கள் தான். உன் கையில் இருக்கும், உன் கைகெட்டிய தூரத்தில் இருக்கும், உன் பிடியில் இருக்கும் உன் உணர்வுகளை... உன்னால் மாற்றவோ , வளர்க்கவோ, அழிக்கவோ முடிந்த உன் உணர்வுகளை... உன்னால் வெற்றியோ தோல்வியோ பெற வைக்க முடிந்த உன் உணர்வுகளை... தோற்று விட்டது என்று அழுது புரண்டு உயிரை விட்டால்... கொஞ்சம் கூட நம் கட்டுபாட்டில் இல்லாத ஆரோக்கிய தோல்வியை, உடல் வலியை எப்படி தாங்க முடியும்.

உலகில் என்னை விட , உன்னை விட கஷ்ட்படுபவர்கள் பலர் இருகிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களை நினைத்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. யாருடைய குற்றமுமே இல்லாமல் கஷ்டபடுகிறவர்கள் ஒருபுறம் இருக்க, அடிதடி, வெட்டு குத்து, கொலை, போர், வறுமை, வறட்சி, கொடுமை, இன்னும் எவ்வளவோ விஷயங்களால் மனிதனுக்கு மனிதனே தரும் வேதனைகள் மறுபுறம்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்காக நாம் வருத்தப்பட்டு பயனில்லை. ஆனால் மேற்கூறிய விஷயங்கள் எல்லாமே நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

சினிமாவில் சித்ரவதை தாங்காமல் நண்பனை, குடும்பத்தை, தேசத்தை காட்டி கொடுப்பவர்களை பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் எப்படி துரோகம் செய்யலாம் என்று எரிச்சல் பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தோன்றுகிறது அவன் எவ்வளவு கஷ்டபட்டிருந்தால் தன்னை மீறி துரோகம் செய்திருப்பான். லஞ்சம் வாங்கி துரோகம் செய்த எத்தனையோ பேர் இருக்க இவர்கள் மேல ஏன் கோபப்பட வேண்டும்.

இப்போது கூட மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரிவுகளின் பெயரால், ஆசையினால், அகம்பாவத்தினால், பொறாமையினால் எவ்வளவு கொடுமைகள். ஒவ்வொரு மனிதனும், அடுத்தவனை காயப்படுத்தும் முன்பு, என்னால் இந்த காயத்தை தாங்க முடியுமா என்று ஒரு வினாடி எண்ணினாலே போதும், கண்டிப்பாக அவனால் யாரையுமே காயப்படுத்த முடியாது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மனிதர்கள் இதை நினைப்பார்களா?

கடவுளே! உலகில் ஒவ்வொரு உயிருக்கும் வாழும் நாள் வரை ஆரோக்கியம் கொடு, சாகும் போதும் அமைதியை கொடு. ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு சாவதற்கு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது சரிதான். ஆனால், யாருக்கும் தீங்கு நினைக்காத குழந்தைகள் போன்றோருகாவது?

வலிதான் போதி மரம்... எல்லா ஞானமும் வர வைக்கும் என்றால்.... எங்களுக்கு புரிந்து விட்டது ..ஆனால் அந்த போதி மரத்திற்கு மட்டும் திருப்பி அனுப்பி விடாதே.





Friday, June 19, 2009

தாய்மார்களே தந்தைமார்களே!


தாய் தந்தைகளாகிய என் பெண் ,ஆண் நண்பர்கள் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.


குழந்தை மேல் பாச மழை பொழிந்து, பொத்தி பொத்தி, கொஞ்சி வளர்க்கும் தாய்மார்கள் கூட தான் தன் குழந்தையை இன்னும் ந்ன்றாக பேண வேண்டுமோ, வளர்க்க வேண்டுமோ, நான் சரியாக வளர்பதில்லயோ, வேறு ஒருவராக இருந்தால் நன்றாக பார்ப்பார்களோ என்றெல்லாம் புலம்புவார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை. தான் எது செய்தாலும் போதவில்லை என்றே அவர்களுக்கு தோன்றுகிறது.


காலை எழுந்து குழந்தையை கவனித்து, வீட்டு வேலை செய்து, கணவரை வழியனுப்பி..... அப்பப்பா மூச்சி விடாமல் உழன்று பின் தன் அலுவலகம் சென்று அங்கும் வேலை செய்து...ஏசும் பேசும் வாங்கி... பின் வீட்டுக்கு வந்து மீண்டும் குழந்தை , கணவன், வீட்டு வேலை . இதற்கிடையில் குழந்தைக்கு அது தேவை இது தேவை என்று பார்த்து பார்த்து வாங்குவார்கள். இவ்வளவு செய்தாலும். இதெல்லாம் பத்தாதே .. நான் செய்யறது போதாதே ..என்று புலம்பல் வேறு..


ஆனால் எந்த தந்தையும் இப்படி புலம்பி நான் கேட்டதில்லை. குழந்தைக்காக 5 நிமிடம் செலவு செய்தாலும், தான் தான் உலகிலேயே சிறந்த தந்தை என்று அவர்கள் நினைப்பு. ஏன் இப்படி?


சில நேரங்களில் கோபம் வருவதாலேயோ, கோபத்தில் கத்துவதாலேயோ, கொஞ்சம் களைப்பாக இருப்பதாலேயோ, சிற்சில விஷயங்கள் கவனிக்க முடியாததாலேயோ நீங்கள் குறைந்தவர்கள் ஆகிவிட மாட்டீர்கள். இந்த தடைகளை பார்க்காமல், கடக்காமல் வந்தால் நீங்களும் நானும் மனிதர்களே அல்ல... தெய்வங்களாகி விடுவோம். இவை எல்லாம் தடைகள் தானே தவிர தவறுகள் அல்ல.



இன்னும் இன்னும் செய்யணும் என்று நினைக்கும் தாய்மார்களே... இதுவே போதும் என்று நினைக்கும் தந்தை மார்களே... உங்களை விட உங்கள் குழந்தையை வேறு யாருமே நன்றாக பார்த்து கொள்ள முடியாது. உங்களை விட சிறந்த தாய் தந்தை உலகில் வேறு கிடையாது....


அதனால், உங்களை நீங்களே குறைத்து மதிபிடுவதை விடுங்கள்...


'You are the BEst! You know it! Just accept it!'



மலரும் நினைவுகள் !


நமக்கு தான் இப்பவும் சரி அப்பவும் சரி எக்ஸாம் நா நாலு நாளிக்கு முன்னாலேயே உதறல் எடுக்க ஆரம்பிச்சிடும்.. என்ன தான் விழுந்து புரண்டு படிச்சாலும் எக்ஸ்ம் ஹால் உள்ள நுழைய போகும் போது தான் எதுவுமே படிக்காத மாதிரி ஒரு பயம். அப்படியே அடிச்சி பிடிச்சி படிச்சா கொஞ்சூண்டும் மறந்து போன மாதிரி வேற இருக்கும்.

காலையிலே எக்ஸாம் எழுத போற முன்னாடி எங்க கிளாஸ்-எ எறும்பு கூட்டம் மாதிரி ஒரே சுருசுருசுருசுருசுருப்பு..

கணபதி எக்ஸாம் லே நல்ல மார்க் வாங்கினா விநாயகருக்கு தேங்காய் உடைக்கறதா வேண்டிக்குவான். நம்ம காசுலேயா வாங்க போறோம்.. அப்பாக்கள் பாவம் நமக்கு ஸ்கூல் பீஸ், எக்ஸாம் பீஸ் எல்லாம் கட்டி தேங்காய்க்கும் வேற sponsor பண்ணனும்..

அதே விநாயகருக்கு நூறு தோப்புகரணம் போடறதா வேண்டிக்கறது விஜயா.. ஆனா அவ ஒரு தடவை கூட குடுத்த வாக்க காப்பதினாளான்னு தெரியலே... நான் கேட்டதும் இல்ல அவ தோப்பு கரணத்தே எண்ணினதும் இல்ல.. ஒரு வேளை 'நான் ஒரு தடவை தோப்பு காரணம் போட்டா நூறு தடவை போட்ட மாதிரின்னு' அவ விநாயகர்கிட்ட சொல்லிட்டாளோ என்னவோ.. நல்ல வேளை இது வரைக்கும் அவகிட்ட விநாயகர் 'நான் ஒரு மார்க் குடுத்தா நூறு மார்க் குடுத்த மாதிரின்னு சொல்லவே இல்லை.' அவ எப்போவுமே நல்ல மார்க் வாங்கிடுவா.

ரோஸ் . அவள் பரீட்சை எழுதும் முன்னால் எங்கள் கான்வென்ட் அருகில் உள்ள சர்ச் க்கு போய் இயேசு வுக்கு லெட்டர் எழுதி உண்டியலில் போட்டுட்டு வருவா. அவள் அதோடு பலரோட லெட்டர் உம கூட சேர்த்து போஸ்ட் செய்ததுண்டு . என்னிடம் கூட லெட்டர் இருக்கான்னு கேட்பாள். இதுலே நிறைய பேருக்கு டௌட் கூட வரும். மாதா முன்னாடி இருக்க உண்டியல் லே போடணும்னா இல்ல இயேசு முன்னாடி இருக்க உண்டியல்லே போடனுமான்னு..

சாய் தாயத்து கட்டிக்குவான் எக்ஸாம் ஆரம்பிக்கற முதல் நாள். தன் மேல் இல்லாத நம்பிக்கை தாயத்து மேல்.

இதுலே மொட்டை அடிக்கறேன். நடந்தே கோவிலுக்கு வர்றேன்... இப்படி எல்லாம் கூட நிறைய வேண்டுதல் உண்டு.

முதல் எக்ஸாம் நல்லா எழுதின அன்னக்கி போட்டிருக்க டிரஸ், பேனா, எல்லாம் கடைசி எக்ஸாம் வரை மாத்தாத காலம் கூட உண்டு ..அது ராசியான டிரஸ், பேனான்னு . ஒரு வேளை அம்மா ரொம்ப வற்புறுத்தி பிடிக்காத டிரஸ் போட்டு அன்னக்கி எக்ஸாம் நல்ல எழுதிட்டா அத தான் கடைசி நாள் வரை அழுதிட்டே போட வேண்டி வேற வரும்..

அதென்னவோ.. என்ன தான் படிச்சாலும் இப்படி சின்ன சின்ன விஷயத்துலே ஒரு நம்பிக்கை... இப்போ நினைச்சா காமெடி யா இருந்தாலும்.. அப்போ அத அவ்ளோ சிரத்தையா நம்பி பத்தாததுக்கு பக்கத்துலே இருக்கவங்களுக்கு வேற lecture அடிச்சத நினச்ச சிரிப்பு தான் வருது....

உண்மைய சொல்லனும்னா இப்போ கூட நாலு கழுதை வயசான பிறகும் (இது சும்மா எழுத்துக்கு தான் ;) அந்த நம்பிக்கைகள் கொஞ்சம் எட்டி பாக்கத்தான் செய்யுது.. என்ன அந்த வயசுலே கள்ளம் கபடம் இல்லாம எல்லார்கிட்டயும் சொன்னோம்.. இப்போ சொன்னா சிரிப்பாய்ங்கன்னு அடக்கி வாசிக்கரோம்லே...





Thursday, June 18, 2009

காதல் கவிஞன்! - கதை


'இன்னக்கி கார்தி்க்கோட 'காதல்' கவிதைதொகுப்பு வெளி வருது . ஆபீஸ் போற வழியில் வாங்கிட்டு போகணும்.' இது வரை அவள் அவன் கவிதை , கதை எல்லாவற்றிலும் முதல் பிரதி வாங்கிவிடுவாள்.


கார்த்திக் ஒரு எழுத்தாளர். குறிப்பாக பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் அவரது கதைகள். நம் தமிழ் சினிமா போலல்லாது கார்த்திக் கதைகளில் எப்போதுமே கதைக்கு நாயகி தன் முன்னிடம். ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் இவ்வளவு ஆளாக புரிந்து எழுத முடியுமா என்று கவிதா எப்பொழுதுமே ஆச்சரியபடுவாள். அதுவும் அவன் கவிதைகள் காதலில் நனைந்து, ஆசை ஒழுகி கொண்டே இருக்கும். இப்படி ஒருவனை கணவனாக அடைபவள் கொடுத்து வைத்தவள் என நினைப்பாள். அப்படியே அது தானாக இருக்க கூடாதா என்று கூட ஒரு ஆசை உண்டு.


'கவிதா!' அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டு கனவு கலைந்தாள்.


'மதியம் சீக்கிரம் வந்துடு. மாப்பிளை வீட்டுலே இருந்து வராங்க.'


'இப்போ என்னம்மா எனக்கு கல்யாணத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் நிம்மதியா சம்பாதிக்கரேனே!'


'ஒன்னும் பேசாதே . சீக்கிரம் வா. மாப்பிள்ளை பிடிக்கலேன்னா அப்பறம் பாக்கலாம்.'


கவிதா முனுமுனுத்து கொண்டே கிளம்பினாள்.


மதியம் கையில் 'காதல்' உடன் வீட்டு உள்ளே நுழைந்தாள். ஒரு நிமிடம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தன. இது கனவா என்ன? கிள்ளி பார்த்து கொண்டாள்.


அவள் வரும் முன்னே மாப்பிள்ளை வீட்டார வந்து விட்டார்கள். அங்கு மாப்பிளையாய் அமர்ந்திருந்தது சாட்சாத் கார்த்திக் தான். அட!கடவுள் application குடுக்கும் முன்னாலே offer letter குடுதுட்டரே. கண் மூடி திறக்கும் முன்னே சடங்குகள் சம்ப்ரதாயங்கள் முடிந்து கல்யாணம் நடந்து, இப்போது ஒரு வருடம் ஆகி விட்டது.


ஆனால் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள். உருகி உருகி காதல் கவிதை எழுதும் கார்த்திக் அவளை அவள் நினைத்த மாதிரி உருகி உருகி காதலிக்க எல்லாம் இல்லை. 'கவிதா என்றொரு கவிதை' என்று பாடுவான் என அவள் நினைக்கும் போதெல்லாம் அவன் சொல்வது 'Be practial'.


இன்று அவள் முடிவு செய்து விட்டாள். இதை பற்றி பேசியே ஆக வேண்டும். சமயம் பார்த்து மெதுவாக, ' என்னங்க உங்க கதை கவிதை எல்லாம் எவ்ளவு ரொமான்டிக்- ஆ இருக்கு. பெண்கள் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சி எழுதறீங்க. ஆனா ரியல் லைப்ல ஏன் வேற மாதிரி இருக்கீங்க?'


கார்த்திக் புருவம் நெரித்து பார்த்தான். ' don't be silly! அது கதை- கவிதை. இது வாழ்கை. அது வேற இது வேற.'








Wednesday, June 17, 2009

பலருள் சிலர்... - கவிதை

மூன்றுக்கு நான்கு வேளை

மூச்சு முட்ட சாப்பிட்டு

பட்டினி பற்றி பகிரங்கமாக

பிரசங்கம் பண்ணும் சிலர்....

அன்பென்றால் என்ன விலை

அரை கிலோ என்று கேட்டு

அண்டத்தில் அன்பில்லை என

ஆவேசப்படும் சிலர்...

என் வீட்டு நாய் குட்டிக்கு

எட்டு நாளாய் அஜீரணம் என்றுவிட்டு

எதிர் வீட்டு மழலை துளி பாலுக்கு அழுவதை

எட்டி நின்று பார்த்து மறக்கும் சிலர்...

அருகிலிருக்கும் மனதின் தேவை

அன்பென்று அறியாமல்
ஆசியா கண்டத்தின்

அமைதியை தேடும் சிலர்....

பல கோடி மாந்தருக்குள்

பல்கி பெருகிய இவர் போல்

வாழ்ந்திருந்த சுவடே இன்றி நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ??




Wednesday, June 10, 2009

மனம்! -கதை

தினேஷ்! சீக்கிரம் வாடா ஸ்கூல் க்கு லேட் ஆச்சி.

இருடா.. நீ ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்கே ஓடிபோயிடுவே,, நான் யானை அசைஞ்சி தானே வரணும்! :)


தினேஷ்! homework பண்ணலியா. stand upon the bench!


சார் பெஞ்ச் லே நிக்கறது என்னகு ஒன்னும் problem இல்ல. ஆனா அப்பறம் பெஞ்ச் உடஞ்சிடிச்சின்னா என்ன ஒன்னும் கேக்க கூடாது! :)


டேய் தினேஷ்!நெக்ஸ்ட் வீக் உனக்கு பர்த்டே தானே டிரஸ் வாங்கிட்டியாடா.


உனக்கு டிரஸ் வாங்க எந்த கடைக்கு வேணும்னாலும் போகலாம். என்னக்கு வாங்கனும்ன நான் ஒரு கடையே வாங்கணுமே :)


தினேஷ்! இன்னும் 2 இட்லி சாப்டுடா. வளர்ற பையன் 1 இட்லி சாப்பிட்டா போதுமா. உனக்கு பிடிக்கும்னு தானே சாம்பாரும் தேங்காய் சட்னியும் வச்சேன்.


நீ வேறம்மா ஒன்னு சாப்பிட்டே இப்படி இருக்கேன்.. இன்னும் ரெண்டு சாப்பிட்டா நம்ம வீட்டு கதவ பெருசு தான் பண்ணனும்.


தினேஷ்! நானும் பாத்துட்டே இருக்கேன். எல்லார்கிட்டேயும் நீயே உன்ன குண்டு குண்டு ன்னு சொல்லி இன்சுல்ட் பண்ணிகறியே. நீ ஸ்மார்ட் அ அழகா தானே இருக்கே. உனக்கு என்ன கொறச்சல். சரியா சாப்பிட கூட மாட்டேங்கறே.


இல்லம்மா. வேற யாரவது நான் குண்டுன்னு சொல்லறதுக்குள்ள நானே சொல்லிகறேன். அப்போ என்னக்கு மன கஷ்டம் கொறயுமேன்னு தான்!





Tuesday, June 9, 2009

என் கேள்விக்கென்ன பதில்?

எனக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் போது நிறையா சந்தேகம் வரும். அதுவும் geographhy லே ரொம்ப நிறையா வரும். அப்போ அப்போ teachers கூட திணருவதுண்டு. ஒரு டீச்சர் கிளாஸ் உள்ள நுழையும் போதே 'இன்னக்கி இந்த chapter கண்டிப்பா முடிக்கணும். No questions please' ன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க. ஆனாலும் நமக்கு கேள்விகள் மட்டும் கண்ணு மண்ணு இல்லாம தோணிகிட்டே இருக்கும்.. இத்தனை வருசத்துக்கு அப்பறம் அதுலே பல கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கு . சிலதுக்கு இன்னும் கிடைக்கலே :(

அந்த லூசுத்தனமான கேள்விகளில் சில இதோ:-

1. உலகம் உருண்டை வடிவமானது. சரி. அப்போ உருண்டையின் மேலே இருப்பவர்கள் நேராக நிற்கும் பொது கீழே இருப்பவர்கள் தலை கீழாக நிற்க மாட்டார்கள? :( புவியீர்ப்பு விசையினால் தான்.

2. உலகில் எல்லா இடத்திலும் ஒரே நேரம் மழையும் வெயிலும் வருவதில்லை. அப்போ ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் இடது பக்கம் மழையும் வலது பக்கம் வெயிலும் இருக்குமா? :)

3.உலகம் சுற்றும்போது நில பரப்பும் நீர் பரப்பும் எப்படி இடம் மாறாமல் அப்படியே அதே இடத்தில் இருக்கிறது?

4. உலகில் சில நாடுகளில் , 'நீண்ட இரவு, நீண்ட பகல், குறுகிய இரவு, குறுகிய பகல்' இதெல்லாம் என்ன ?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா என்ன பாத்து பயப்பட மாட்டாங்களா என்ன :)



Friday, May 29, 2009

நானும் என் discipline -உம்


கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு கட்டுரை படிச்சேன். இந்தியர்கள் சிங்கப்பூர் லே இருக்கும் பொது disciplinedஆ இருக்காங்க... இங்கிலாந்து லே இருக்கும் பொது disciplined ஆ இருக்காங்க.. ஆனா இந்தியாவிலே இருக்கும் போது மட்டும் disciplined ஆ இருக்க மாட்டேங்கறாங்க அப்படின்னு ரொம்ப சாடி இருந்தாங்க.


அத படிச்சா உடனே, அதெப்படி அவங்க இப்படி சொல்லலாம்.. நமக்கு இல்லாத discipline-ஆ ... இனி implement பண்ணிட வேண்டிய்து தான் அப்படின்னு ஒரு மெகா முடிவு எடுத்து, எங்கேடா ஆரம்பிக்கலாம் னு மண்டைய சொரிஞ்சிட்டு இருக்கும் போது ஆண்டவனா பாத்து ஒரு வழி ஏற்படுத்தி குடுத்தான்..


என்னோட atm கார்டு inactive ஆயிடிச்சி. சரி பக்கத்துலே தானே பேங்க் இருக்கு நேரா போய் பணம் எடுத்துக்கலாம்னு உள்ள போனேன். withdrawals section தனியா இருக்குன்னு reception லே சொன்னாங்க. சரின்னு வித்ட்ராவல் ஸ்லிப் fill பண்ணி எடுத்துட்டு கியூ லே போய் நின்னேன்


ஒருத்தர் படு வேகமா வந்தார்.. வந்து அப்படியே முன்னே முன்னேறி சென்றார். என்னை கியூ லே பின்னுக்கு தள்ளிட்டு அவர் வேலைய முடிச்சிட்டு போய்ட்டார் .. நம்ம முண்டி அடிச்சிட்டு போனா நம்ம discipline என்னாகரதுன்னு நானும் கியூ லேயே நின்னேன்.


அடுத்தது இன்னொருத்தர் வந்தார். அடிச்சு பிடிச்சு முன்னாடி போய் வேலைய முடிச்சிட்டு போய்ட்டார். மொத்தத்துலே யாருமே கியூ பத்தி யோசிக்கவே இல்லை.. இது கொஞ்ச நேரம் நடந்துட்டே இருந்துது.. நான் கொஞ்சம் கடுப்பாக ஆரம்பித்திருந்தாலும்.. ஒரு முடிவோட முன் வச்ச கால பின் வைகரதில்லைன்னு இருந்தேன்.


இப்படியே கொஞ்ச நேரம் போச்சி. counter லே இருந்த அம்மா என்னபார்த்துகிட்டே இருந்தாங்க.. நமக்கு ஒரே பெருமை. என்ன ஒரு discipline ன்னு அந்த அம்மா பாக்றாங்க போலன்னு.


இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி அந்த அம்மா என்ன கூப்பிட்டாங்க..


'என்னங்க... இப்படி கொஞ்சம் முன்னாடி வாங்க. நானும் ரொம்ப நேரமா பாக்றேன்.. இப்படி பேக்கு மாதிரி நின்னுட்டே இருந்தா நீங்க அங்கேயே தான் நிக்கணும். நாங்க பேங்க் அ பூட்டிக்கிட்டு போற வரை. வந்தோமா வேலைய முடிச்சோமா போனோமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா இருக்க வேண்டாம். '..


நான் அசடு வழிந்து கொண்டே பொய் withdrawal ஸ்லிப் ஐ நீட்டினேன்.


'என்னங்க கியூ லே நின்னு பழக்கம் இல்லையோ?' .


'ஆமாங்க நான் இருக்கிற இடத்துலே எல்லாம் கியூ ல் வரிசையா தன் போகணும்'.


' அது எந்த ஊரப்பா அது?'


'லண்டன்'.


'அதெல்லாம் இங்க ஒத்து வராதுங்க.. பொழைக்கிற வழிய பாருங்க'.


ஹி.. ஹீ.. என்று மழுப்பிக்கிட்டு வெளியே வந்தேன்...


அடங்கொப்புரானே... நான் discipline-ஆ இருக்கலாம்னு பாத்தா.. பொழைக்க தெரியா புள்ளைன்னுட்டாங்களே!!!





Wednesday, May 27, 2009

வெளிச்சத்திற்கு வரும் முன்.. -கதை

ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..

ஏதோ சத்தம் மட்டும் கேக்குது...

குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.

குரல் 2: அழுகை...

குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??

குரல் 2: இல்லங்க இது சந்தோசம்.. சரி கொழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்??

குரல் 1: நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.. பையனா இருந்தா சுந்தர். பொண்ணாயிருந்தா சுந்தரி.

குரல் 2: ம்ம்.. :) சரி.. அம்மா அப்பா ன்னு கூப்பிட சொல்லலாமா இல்லை டாட் மாம் ன்னா?

குரல் 1: அம்மா அப்பாவே சொல்லலாம்.. எனக்கு அதுதான் பிடிக்கும். உனக்கு?

குரல் 2: எனக்கும் தான்.

அம்மா.. அப்பா வா... ம்ம்.. என்னக்கும் பிடிச்சிருக்கு... நீங்க எப்படி இருப்பீங்க? என்னக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு..

2 மாதங்களுக்கு பின்....

குரல் 1: மெதுவா மெதுவா.. ஸ்கேன் சிம்பிள் ஆ முடிஞ்சிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் கூட இருக்கலாமாம். என்னக்கு ஒரே குஷியா இருக்கு.

குரல் 2: என்னாகும் தாங்க. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு.

குரல் 1: சீ சீ. .. பயப்படாதே.. சும்மா டெஸ்ட் தானே.

நீங்க என்னை பாக்க போறீங்களா..... ம்ம்.. எனக்கு ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு...

4 மாதங்களுக்கு பின்..

குரல் 1: என்னங்க குழந்தை உதைக்குதுங்க.. ஹ ஹ ஹ ஹி.. ஹி .. ஹி...

குரல் 2: எங்க ... எங்க.... அதுக்குள்ள வா... பையன் தான் போல... இப்போவே குறும்பு பாரேன்...

குரல் 1: உங்கள மாதிரி தானே இருக்கும்..

அம்மா.. அப்பா... நான் தான்... சந்தோசத்துலே குதிச்சிட்டு இருக்கேன்..... ஹ ஹ ஹ ஹ ஹ...

சில நாட்களுக்கு பிறகு..

குரல் 1: என்னங்க ரொம்ப தல சுத்துது... (மயங்கி சாய்கிறாள்.)

குரல் 2: என்னம்மா... என்ன ஆச்சி????

பலவேறு சத்தங்கள்....

குரல் 1: டாக்டர் .. என்னாச்சி டாக்டர்??

குரல் 2: சாரி சார். அபோர்ஷன் ஆயிடிச்சி..

குரல் 1: ரொம்ப பத்திரமா தானே இருந்தோம்... எப்படி. ..?

குரல் 2: சரியான காரணம் தெரியலே... மருந்து எழுதி தரேன் சரியா சாப்பிட சொல்லுங்க. அவங்க கூடவே இருங்க...

(விசும்பலோடு ) அப்பா.... அம்மா..... உங்களை பாக்கணும் உங்க கூட விளையாடனும்னு நினைச்சேனே.... முடியவே முடியாதா.... நான் என்ன பண்ணுவேன்... !!!!!!!!!!!!!!!!!

யார் இது




கஜினி ?? -கதை


ஆதவனுக்கு மனது பட பட வென்று அடித்து கொண்டது. இது மூன்றாவது முறை.
முதல் முறை மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்தது!

பொன்னி அவன் மாமன் மகள். அவன் கண்ணுக்கு ஒரு பேரழகி. நிறைய கனவு கண்டு, டூயட் பாடி, மறைந்திருந்து பார்த்து, சொல்ல போய் மறந்து, கடைசியில் ஒரு வழியாக சொல்லி விட்டான். பொன்னி சொன்னாள் ' நான் இன்னும் நிறைய படிக்கணும் ஆதவா! '


இரண்டாம் முறை 2 வருடங்களுக்கு முன் நடந்தது!


செல்வி அவனுடன் படித்தவள். அவன் கண்ணுக்கு உலக அழகி. தத்தி தடுமாறி அப்படி இப்படியென்று கடைசியில் சொல்லி விட்டான். செல்வி சொன்னாள், 'சாரி ஆதவா! நான் என் அத்தை பையனை லவ் பண்ணறேன்.'


ஷாலினி யை 5 மாதங்களாக அவனுக்கு தெரியும். நல்ல நண்பர்கள். அவனுடைய பழைய காதல் பற்றி கூட சொல்லியிருக்கிறான்.நல்ல வேலை பொன்னியும் செல்வியும் அழகு என்று ஏமாந்து போகவில்லை என்று கூட கிண்டல் பண்ணியிருக்கிறான். உண்மை தான் இப்போஅவர்கள் எல்லாம் அவனுக்கு அழகாக தோன்ற வில்லை.


அது போகட்டும். பழக பழக ஷாலினியை பிடித்து போனதும், அவள் இல்லாமல் வாழ முடியாது என்பதையும் அவளிடம் சொல்லி விட வேண்டும்


ஷாலினி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகமெல்லாம் சந்தோசம்.


ஆதவன்: ஷாலினி! உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.


ஷாலினி: சொல்லேன்.


ஆ: நான்... ம்ம்ம் வந்து... நான்...


ஷா:நீ ஏற்கனவே வந்துட்டியே!


ஆ: அதில்லை .. நான் சொல்லணும்.


ஷா: சொல்லணும்ங்கரத தவிர வேற எதாவது சொல்லணுமா :)


ஆ: அது.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்..


ஷா: (அமைதியாக பார்த்து..) இப்போ தான் அப்பா போன் பண்ணினாங்க. கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்களாம் .என் இஷ்டப்படியே சதிஷ் கூட கல்யாணம்.


ஆ: ஒ.. ஆல் தி பெஸ்ட்! பை !


ஆதவன் பயணம் தொடரும்....




Friday, May 22, 2009

பிரபாகரா - நீ நல்லவனா கெட்டவனா?

'தலைவருக்கு என்ன ஆனதோ' என்று பதறும் கூட்டம் ஒரு புறம் ,ஒழிந்தான் ஒரு தீவிரவாதி என்று ஆனந்த கூத்தாடும் கூட்டம் ஒரு புறம் என்று ஒரு பரபரப்பான சூழல் இன்று. காந்தி யும் மண்டேலா வும் அஹிம்சா வழியில் போராட வில்லையா? அவர்கள் சுதந்திரம் வாங்கவில்லையா? இப்படி பல உயிர்களை கொன்று குவிப்பதுதான் விடுதலை போராட்டமா? என்று கூட பலர் பேசியும் எழுதியும் தங்கள் கருத்துக்களை சொல்கிறார்கள்.

கண்டிப்பாக வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு இல்லை என்பது உண்மைதான். அன்பை விட சிறந்த ஒரு ஆயுதம் வேறு ஒன்றுமில்லை என்பதும் உண்மை தான். ஆனால் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்! உங்கள் குழந்தையை உங்கள் கண் முன்னே ஒரு மிருகம் சூறையாட வருகிறது என்றால், நீங்கள் அன்பாலே அந்த மிருகத்தை அடக்க வேண்டும் என்று நினைபீர்களா அல்லது உங்கள் குழந்தையை காப்பற்ற வேண்டும் என்று நினைபீர்களா?


நான் பிரபாகரன் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ கூற வரவில்லை. ஆனால் எந்த ஒரு மனிதனும், அவன் எந்த நாடு , மதம் ,மொழி, இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தன் தன்மானம் ஒன்றை காப்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக நினைப்பான்.தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ இழிவு ஏற்பட்டால் கண்டிப்பாக எதிர்த்து போராடுவான்- அது அஹிம்சை முறையோ அல்லது வன்முறையோ!


தீவிரவாதத்தை ஒழிக்க , அமெரிக்கா ஈராக்-உடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவா நினைத்தது? இல்லையே ! ஆயுதத்தை தானே எடுத்தது ! இதனை ஏற்று கொண்ட உலகம் ,தங்கள் உயிரையும் உடமையையும் காப்பற்றி கொள்ள பிரபாகரனும் ஈழ தமிழர்களும் ஆயுதம் ஏந்தியதை ஏன் ஏற்று கொள்ள மறுக்கிறது.ஒரு நாட்டில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், வாழ்வின் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்டு வேதனைப்படுகிறார்கள் என்பதை தெரிந்த உலக நாடுகள், தாங்கள் தலையிட்டு சுமுக முடிவு கொண்டு வர முயற்சித்திருந்தால் ஒரு வேளை இப்பாடி ஒரு போராட்டமோ, போராளி கும்பலோ உருவாகாமல் இருந்திருக்கலாம்.வேறு யாருமே உதவாத நிலையில், தங்களை காப்பாற்றி கொள்ள வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தியவர்களை, தன் உயிரை மட்டும் கொடுத்து பிற பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களை உலகின் 32 நாடுகள் தீவிரவாதிகள் என்று அறிவித்தது நியாயமா? அவர்களுடைய பிரச்சனை என்ன என்றே தெரியாமல் , தெரிந்து கொள்ள விரும்பாமல், அவர்கள் செய்வது தவறு என்று மட்டும் சொல்வது சரியா? அவர்கள் ஆயுதம் எடுத்தது தவறு என்றால், அந்த தவறுக்கு உலக நாடுகள் எல்லாமும், எல்லா மனிதர்களும் பொறுப்பாவோம்.


எங்கோ யாரோ சாகிறார்கள் நமக்கென்ன என்று இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கூட்டம் இல்லமே போயிருக்கும். இத்தனை சாவுகள் நடக்காமலே இருந்திருக்கும். சாவது எந்த பக்க மனிதனாயிருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தான் . இது வரையும் தலையிடாமல் ,உண்மை நிலை அறியாமல்,இப்பொழுதும் அவன் தீவிரவாதிதான் என்று அலசி ஆராயாமல் முடிவு செய்து , பல மனிதர்கள் அடிமையாகவே வாழ்வு நடத்த அனுமதிக்க போகிறோமா??


ஒரு வேளை பிரபாகரன் கெட்டவனாக கூட இருக்கலாம். ஆனால் அவனது குறி்கோள் விடுதலை.. அடிமை தளத்திலிருந்து விடுதலை. அடிமைத்தனம் என்றால் என்னவென்று அதனை அனுபவிக்காத நமக்கு புரியாதுதான் ..ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாமா? தமிழனோ , சிங்களனோ ,ஸ்ரீலங்காவில் இருப்பவனும் மனிதன் தான், நம் எல்லோரையும் போல விடுதலையை சவாசிக்க ஆசைப்படும் ஒரு உயிர்தான்.


அரசியலுக்க்காகவும், தனி மனித லாபத்திற்காகவும் ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனையை உபயோக படுத்துவதை விட்டு விட்டு, நம் சக மனிதர்களின் பிரச்சனை என்று உணர்ந்து, அங்கு நடக்கும் உண்மை நிகழ்வுகளை ஆராய்ந்து, தமிழனும சிங்களனும் அமைதியாக வாழ நாம் வழி ஏற்படுத்த முயல வேண்டும்.


இதை யோசிக்க தமிழனாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. மனிதனாக யோசித்தாலே போதும்..




Friday, May 8, 2009

கடவுளுக்கு ஒரு கடிதம்! - 1


அன்புள்ள கடவுளுக்கு!

நான் இங்கு நலமில்லை. நீ அங்கு நலமாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.

இங்கு உன் பெயரில் ஒரு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. சிலர் நீ இந்து என்றும் , சிலர் நீ முஸ்லீம் என்றும், வேறு சிலர் நீ கிறிஸ்தவன் என்றும், மற்றும் பலர் நீ வேறு பிற மதத்தை சேர்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதனால் பல வாதங்களும், குழப்பங்களும், பிரச்சனைகளும், வெட்டு குத்து என்று கொலைகளும், கொடுமைகளும் கூட நடக்கின்றன.

ஒவ்வொருவரும் நீ தன் மதத்தை சேர்ந்தவன் என்று நிரூபிப்பதற்காக நீ வேறு மதக்காரன் என்று நம்புவனை அழிக்க பார்கிறார். அவர்கள் ஆக்கியதையும் அழிக்க பார்கிறார். நீ ஒரே ஒரு முறை வந்து நீ எந்த மதம் என்று சொல்லி விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்து விடும். அதனால் உன்னை வர சொல்வதற்க்காக தான் இந்த கடிதத்தை எழுதினேன்.

ஆனால், இப்போது தோன்றுகிறது, நீ ஒரு வேளை வந்தால், உன்னை இன்னொரு மதக்காரனாக்கி அந்த மதக்காரர்கள் இந்த மதகாரர்களுடன் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தயவு செய்து இப்போது நீ இங்கு வருவதாக எதாவது எண்ணம் இருந்தால் மாற்றி கொள்ளவும்.

இங்கு இப்போது இருக்கும் நிலைமையில் உன்னை, கடவுள் என்று தன்னை சொல்லி கொள்ளும் பலருள் ஒருவன் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அதனால் இப்பொது வராமலிருப்பதே உனக்கு நல்லது!

பி.கு. இன்னும் நினைக்க முடியாத பல கொடுமைகள் இங்கு நடக்கிறது. நீ பத்திரமாக இரு. மற்ற விவரம் அடுத்த மடலில்.



Thursday, May 7, 2009

ஆசை மேல் ஆசை... -கவிதை

மாசற்ற மழலையாய்

மகிழ்ந்திருந்த நேரத்தில்

தள்ளி விழுந்த பந்தெடுக்க

தவழ்ந்திட ஆசை ..



அழகழகாய் தவழ்ந்தோட

ஆரம்பித்த அந்நாளில்

அடி மேல் அடி எடுத்து

அதிர்ந்து நடக்க ஆசை ..



தத்தி தடுமாறி

தடம் பதிக்கும் நாட்களில்

பெரிய அண்ணன் அக்கா போல

பாய்ந்தோட ஆசை ...



ஆடி ஓடி விளையாடி

ஆர்ப்பரிக்கும் வேளையில்

புத்தக பை தூக்கி

பள்ளி செல்ல ஆசை ..



புத்தகங்கள் கனம் பார்த்து

பயந்திருந்த சமயத்தில்

வேலை செல்லும் பெரியவர் போல்

வீறு நடை போட ஆசை ..



இன்று விடியலில் எழுந்து

இமைக்காது உழன்று

இல்லை என்பதில்லாத

இந்நிலையில் இருக்கையில் ..



பளிங்கு நிலா காட்டி

பாலூட்டிய அன்னையும் ..

விழுந்து எழுந்து நடை பயில

வேகம் தந்த தந்தையும்..



பால் மணம் மாறாத

பசுமையான மனமும்..

நாளைய நாளை பற்றி நினையாத

நல்லினிய நிலையும் ..



திரும்பி கையில் கிட்டாதா

தினம் இனிமை சேராதா ..

இதுவரையில் ஆசைப்பட்டது

இம்மெனும் முன் நடந்தது ..



இத்தனை தூரம் கடந்த பின்

இன்று வந்த இந்த ஆசை ..

எத்தனை கொடுத்தாலும்

எந்தனுக்கு கிட்டிடுமா ??








Wednesday, May 6, 2009

திருமணம் காதலின் வெற்றியா தோல்வியா? -1


அவன்!
நல்ல உயரம். அடர்ந்த முடி. துரு துரு கண்கள். எப்போதும் புன்னகை அரும்பிய இதழ்கள். கொஞ்சம் அரவிந்த சாமி கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாருக் கான் நினைவு படுத்துவான். பேங்க் இல் துணை மேலாளர் பதவி. அம்மா அப்பா தங்கை என்று அழகிய சின்ன குடும்பம். மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு.

அவள்!
அந்த காலத்து ஹேமமாலினி . இதுக்கு மேல விளக்கமே வேண்டாம். செந்தமிழ் பிராமன பெண்.

அவள் பணம் போடவும் எடுக்கவும் வங்கிக்கு வரும்போது அதோடு சேர்த்து மனசையும் போட்டு எடுத்து கொண்டார்கள் ரெண்டு பெரும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா காதல் செடியாகி மரமாகி பூத்து குலுங்க ஆரம்பிச்சிடிச்சி.

எல்லா காதலர்கள் மாதிரியும் தான்.. நீயில்லாமல் நானில்லை.. வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு... அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசி பேசி காதலுக்கு நல்ல உரம் போட்டு வளர்த்தார்கள்.

அந்த நாள் இனிய நாள் வந்தது... ரெண்டு பேர் அம்மா அப்பாவும் இவ்வளவு பெரிய பாவம் செய்துட்டாங்களே அப்படின்னு அழுது புரண்டு சண்ட போட்டு.. சினிமா வில்லன்கள் மாதிரி வசனம் எல்லாம் பேசி அவங்களாலே முடிஞ்ச அளவுக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

நம்ம அவனும் அவளும் ஏற்கனவே காதல் கடலிலே ரொம்ப முழுகி போனதாலே, இந்த எல்லா எதிர்ப்புகளும் தூசு போல தான் தெரிஞ்சுது. எனக்கு நீயும் உனக்கு நானும் இருக்கும் பொது வேற எல்லாரும் எதுக்கு ன்னு அவங்களும் வீர வசனம் எல்லாம் பேசி ஒரு சுபாயோக சுபதினத்தில் நண்பர்கள் நண்பிகள் புடை சூழ கோவிலில் கல்யாணம் முடித்து தனி வீட்டில் குடி புகுந்தார்கள்.

இல்லறம் என்னும் நல்லறம் இனிதே தொடங்கியது!!

செல்லம் செல்லம் என்று கொஞ்சலும்.. கிண்டலும் கேலியும் சிரிப்பும் கும்மாளமுமாக தான் இருந்தது அந்த ஆரம்ப நாட்கள்.

நம்ம விதி தேவன் தான் அவனோட அட்டவணைலே அடுத்த வேலை செய்ய தயாராயிட்டான்.

அவனுக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. அவனுக்கு அவளை விட்டு செல்ல இஷ்டமே இல்லை தான். அவளுக்கும் தான். அவன் அங்க போய் நல்ல வீடு எல்லாம் பார்த்து விட்டு வந்து கூட்டி போவதாக சொல்லி கிளம்பினான்.

சில பல காரணங்களால் அது முடியவில்லை. இப்படியே கொஞ்ச வருடம் போனது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருவான். சில நாள் இருந்து விட்டு மன பாரத்தோடு திரும்புவான். அவர்களுக்கு ஒரு அழகு ஆண் குழந்தையும் இன்னும் அழகு பெண் குழந்தையும் பிறந்தது. காரணங்களும் பஞ்சமில்லாமல் வர அவன் அங்கேயும் அவள் குழந்தைகளுடன் இங்கேயுமாக வாழ்க்கை போய் கொண்டிருந்தது. அவள் தனியாக கஷ்டப்பட கூடாது என்று எதாவது தொழில் செய்ய ஆசைப்பட்ட போது சரி என்றான். இந்த வீடு சின்னது பெருசு வேண்டும் என்றாள் வாங்கி கொடுத்தான். தொழில் விரிவு செய்ய பணம் வேண்டும் என்றாள், நிலம் வேண்டும் என்றாள். வாங்கி கொடுத்தான். குடும்பம் பெரிதாகி பொறுப்புகள் அதிகமாக ஆக மூன்று மாதத்திற்குள் ஒரு முறை வருவது மாறி வருடம் ஒரு முறை ஆகி இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆகியது.

கால தேவன் நில்லாமல் சுற்றி கொண்டே இருந்தான். அவர்களது மகனுக்கு இப்போது பதினைந்து வயது பெண்ணுக்கு பதினான்கு.

அவன் முடிவு செய்து விட்டான். போதும் சம்பாதித்தது. இனி என்னவளுடனும் குழந்தைகளுடனும் தான் வாழ்கை. போதுமான பணம் தான் இருக்கிறதே. வேறு என்ன வேண்டும். அவளுக்கு சொல்லாமல் இன்ப அதிச்சி கொடுக்க முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்து திரும்பி வந்தான்.

அவள் வந்தாள். இரண்டு வருடத்திற்கு முன் பார்த்தது . ஆனால் இன்னும் முன்னை விட அழகாகத்தான் இருக்கிறாள். இனி எப்பொழுதும் இங்கே என்று நினைக்கவே இனித்தது.

கொண்டு வந்த எல்லா பொருட்களையும் எல்லாருக்கும் கொடுத்து விட்டு அமைதியாக நிம்மதியாக அமர்ந்த பொது அவள் அதே புன்னகையுடன் வந்தாள். தான் சொல்ல போகும் செய்தி கேட்டு அவள் முகத்தில் மகிழ்ச்சி பட்டாசு தெறிக்க பார்க்க ஆசையை இருந்தது அவனுக்கு.

சொன்னான்.

அவள் அவனை பார்த்தாள்.

அவள் முகத்தில் பட்டாசு வெடித்து உண்மை தான் ஆனால் அது மகிழ்ச்சி பட்டாசு இல்லை. கோப பட்டாசு.

அவன் எதிர்பார்க்கவில்லை.

அன்று பல விஷயம் நடந்து முடிந்து விட்டது. அவள் முடிவாக சொல்லி விட்டாள். அவனது சம்பாத்தியம் வீட்டுக்கு அவசியம். அவள் தொழில்க்கு இன்னும் முதலீடு தேவை.

அப்படியானால் அவன் தேவை இல்லையா ? அவன் சம்பாத்தியம் தான் தேவையா? அவன் மனதில் ஆயிரம் கேள்விகள். திடமான முடிவெடுத்தான். இனி திரும்ப வெளிநாடு போவதில்லை என்று. இவ்வளவு நாள் சம்பாதித்தது வைத்து வாழலாம்.

அவள் சொனாள். அந்த பணம் எல்லாம் குடும்பத்துக்காக செலவழிந்து விட்டது.

கொஞ்சம் கூடவா மிச்சம் இல்லை? அவன் அவள் பேரில் வாங்கிய நிலமும், வீடும் நகைகளும் எதுவுமே இல்லையா.

அவன் எதிபார்காத பல திருப்பங்கள் வாழ்க்கையில். வந்து இரண்டு நாட்களில் இனி அவனோடு சேர்ந்து வாழ முடியாது என்று அவள் முடிவு செய்து விவாகரத்து கேட்டாள். குழந்தைகளுக்கும் அம்மா தன் வேண்டுமாம்.

பதினைந்து வருங்களுக்கு முன்னால் அவன் தேடி தேடி திளைத்த காதல் எங்கே?
முழுகி முழுகி முத்தெடுத்த தினங்கள் எங்கே?
சிரிப்பும் சந்தோஷமும் ஆசையும் எங்கே?
நீ என் உயிர் நான் உன் உயிர் என்கின்ற பேச்செல்லாம் எங்கே..

நடந்தான் கோர்ட் க்கும் வீட்டுக்கும். ஒரு வக்கீலிடம் தினக்கூலியாக குமாஸ்தா வேலை பார்க்கிறான்.

அவனுக்கு இப்போது தங்க இடமில்லை.
குழந்தைகள் இல்லை..
மனைவி இல்லை..
காதல்??
அவனது காதல் கல்யாணத்தில் தான் முடிந்தது. அது வெற்றியா தோல்வியா?



Tuesday, May 5, 2009

ஒரு நாள்... - கதை


அலாரம் அடித்தது! மணி ஆறு!


நந்தினி அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உலகத்தையே புரட்டி போடவேண்டும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு. அவசரம் அவசரமாக பல் துலக்கிவிட்டு சமையல் அறைக்கு சென்றாள். காலையில் என்னென்ன சமைக்க வேண்டும் என்று இரவே முடிவு செய்துவிட்டாள். இன்று எலுமிச்சை சாதமும் உருளை கிழங்கு பொரியலும் மதிய உணவுக்கும்,சிற்றுண்டிக்கு தோசையும் சட்னியும் செய்ய தொடங்கினாள்.


இடை இடையே கண்கள் கடிகாரத்தை பார்த்து கொண்டே இருந்தன. மணி ஏழு அடிக்கும்போது ஏறத்தாழ எல்லாம் முடிந்து விட்டிருந்தது. இனி கிருஷ்ணா வுக்கும் அவளுக்கும் மத்திய உணவு எடுத்து வைக்கவேண்டும். அதற்குள் கிருஷ்ணா, சுமியையும் எழுப்பி விட வேண்டும். இப்போது எழுப்ப ஆரம்பித்தால் தான் அவள் மற்ற வேலைகளை முடிக்கும்போது எழும்புவார்கள். கிருஷ்ணா அவள் கணவன். சாப்ட்வேர் engineer ஆக பணிபுரிகிறான். சுமி அவனை மொத்தமாக உரித்து வைத்து பிறந்த அவள் ஒரே செல்ல குழந்தை. ஐந்து வயதாகிறது. கிருஷ்ணா காலையில் சுமியை பள்ளியில் விட்டுவிட்டு, நந்தினியை பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு ஆபீஸ் க்கு சென்றுவிடுவான்.


சுமி குட்டி... சுமி குட்டி... நேரம் ஆச்சி எழுந்திருடா... கிருஷ்ணா காலிலே சீக்கிரம் மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே எழுந்திருங்க.. சொல்லிக்கொண்டே சமையல் அறையில் மீதமுள்ள வேளையில் மும்மரமானாள். பாதி பாத்திரம் துலக்கி கொண்டிருக்கும் சுமி.. கிருஷ்ணா எழுந்திருங்க ..இனி கூப்பிட மாட்டேன்... சொல்லி கொண்டே மீதி பாத்திரம் தேய்த்து கழுவி முடித்தாள். கிருஷ்ணா பாத்ரூம் பக்கம் போகும் சத்தம் கேட்டது.


கிருஷ்ணா சுமியை குளிக்க வசி அனுப்புங்களேன்.. நான் அதுக்குள் தோசை வார்த்துடுவேன் .. ப்ளீஸ்..


கிருஷ்ணா சுமியை குளிக்க வைத்து அனுப்ப, நந்தினி அவளுக்கு உடை அணிவித்து தோசை ஊட்டி விட்டு கொண்டிருக்கும்போது கிருஷ்ணா கிளம்பி வந்தான். தோசை டேபிள் லே வச்சிருக்கேன் எடுத்துகோங்க என்றாள். ம்ம்.... சொல்லிக்கொண்டே இரண்டு தோசையில் ஒரு தோசை சாப்பிட்டிவிட்டு ஒற்றை டேபிள் இல் விட்டு சென்றான்.


கிருஷ்ணா தோசை சரியா வரலியா ஏன் சரியா சாப்பிடலை? நந்தினி வருத்தமாய் கேட்டாள். .. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை. படுக்கை அறையில் அவன் நிற்பதை பார்த்துவிட்டு மீண்டும் கேட்டாள்... தோசை நல்லா இல்லையா.. சுமிக்கு கூட பிடிச்சிதே.. சொல்லுங்க பிடிக்கலியா... கிருஷ்ணா திரும்பாமல் சொன்னான்... ஓகே.. .. நந்தினிக்கு கோபம் வந்தது... இவ்வளவு கேக்கறேன் சரியா பதில் கூட சொல்ல மாட்டேன் என்கிறாரே.. ஓகே ன்னா நல்ல இருக்குன்னு அர்த்தம்மா இல்லைன்னு அர்த்தமா... என்றாள்..


ம்ம்.. ஓகே... ன்னா ஓகே தான் கிருஷ்ணா கிளம்புவதில் மும்மரமானான்.. நந்தினி அவனுக்கு பிடிக்குமென்று பார்த்து பார்த்து தான் முறுகலாக தோசை செய்தாள்


நந்தினி அவசரம் அவசரமாக கிளம்பி அவர்கள் மத்திய உணவை சரி பார்த்து எடுத்து வைத்து சுமியையும் கூட்டி வந்து காரில் உட்கார வைத்து அவளும் அமர்ந்தாள்.. கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது. கிருஷ்ணா வும் வந்து அமர்ந்தான்.


கிருஷ்ணா என் டிரஸ் நல்லா இருக்கா? .. கல்யாணம் ஆன புதுசில வாங்கினது.. கிருஷ்ணா திரும்பவே இல்லை.. .ம்ம்... என்றான்.


சுமி ய இனி சீக்கிரம் எழும்ப பழக்கணும் அப்போதான் காலைலே படிக்கற பழக்கம் வளர்க்க முடியும்.. கிருஷ்ணா ம்ம்.. என்றான்.


இன்னைக்கி கார் சர்வீஸ் விடணும்னு சொன்னீங்களே இப்போவே விட்டுடுவீங்களா??? கிருஷ்ணா..ம்ம்... என்றான்...


நந்தினிக்கு ம்ம்.. தவிர எதையாவது கேட்டால் தேவலாம் போல இருந்தது...


சுமி.. டாடி .. யாரவது நம்கிட்ட பேசினா நம்ம பதில் பேசனும்னு மிஸ் சொல்லியிருக்காங்க... என்றாள்..


கிருஷ்ணா... ம்ம்ம்.. என்றான்...


சரி.. கிருஷ்ணாவுக்கு எதோ டென்ஷன் போல எண்ணிகொண்டாள்...


சுமி குட்டி மிஸ் குடுக்கற லஞ்ச் ஒழுங்கா சாப்பிடணும்..சமர்த்தா இருக்கணும்.. அம்மாவும் அப்பாவும் ஈவ்னிங் வர்றோம் சரியாடா.... டாட்டா... சொல்லி கொண்டே கொண்டே குழந்தையை அனுப்பி விட்டு வந்தாள்..


அடுத்த அவள் பஸ் ஸ்டாப் வந்தது.. கிருஷ்ணா நான் கிளம்பறேன்... கிருஷ்ணா ம்ம்.. என்றான்...


அன்று அலுவலகத்தில் நிறைய வேலை... அவளும் சாப்ட்வேர் என்ஜினியர் தான்.. மத்திய உணவு நேரம் தாண்டியதை வேலை மும்மரத்தில் கவனிக்கவில்லை.. இப்போதுதான் பசி தெரிந்தது. தோழி ராணி அவளை தேடி அவள் இடத்திற்கே வந்து விட்டாள். சாப்பிட போலாமா.. இன்னக்கி என்ன ஸ்பெஷல்???


சிம்பிள்- ஆ லெமன் ரைஸ் பொட்டேடோ சைடு டிஷ் தான் பண்ணினேன். இது சிம்பிள்-அ? சிரித்தால் ராணி.. நான் ஆனந்த பாவன் லே லஞ்ச் ஆர்டர் பண்ணிட்டு வந்திருக்கேன் சொன்னால். சாப்பிட ஆரம்பித்தவுடன் லெமன் ரைஸ் சாப்பிட்டு பார்த்தவள்.. நந்தினி நான் மட்டும் இப்படி சமச்சேன்னா என் ஆதுக்கறார் என்ன சுத்தி சுத்தி வருவார்... தினமும் பொலம்புவார்.. ப்ளீஸ் இன்னக்கு எதாவது ட்ரை பண்ணு நல்லா இல்லன்ன கூட நான் அட்ஜஸ்ட் பண்ணிகறேன்னு.. என்னகு தான் சமைக்க இன்ட்ரெஸ்ட் எ இல்ல... நந்தினி சிரித்தாள்...


அன்றைய நாள் எல்லா நாள்களை போல விரைவாக சென்று விட்டது... வேலை பழு நடுவில் மூன்று முறை கிருஷ்ணாவிற்கு போன் செய்தாள்.. போன் எடுக்கும் போதெல்லாம் பிஸி...அப்பறம் பேசறேன்.. என்றான்.... சரி என்று சொனாள்.


சாயங்காலம் வீடு வரும் வழியிலே இரவு உணவுக்கு என்ன செய்வது என்று யோசித்து வைத்திருந்தாள்.


சுமியை குளிக்க வைத்து இரவு உடை மாற்றி உணவு கொடுத்து படுக்க வைத்து விட்டு வந்து, கிருஷ்ணாவுக்கு உணவு எடுத்து வைத்து கொண்டிருந்தாள். கிருஷ்ணா பேப்பர் படித்துவிட்டு டிவி இல நியூஸ் பார்த்து கொண்டிருந்தான். அவனது தொலைபேசி சிணுங்கியது .அலுவலக நண்பன். இருவரும் அரட்டை ஆரம்பித்தால் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும்..


நந்தினி குரல் கொடுத்தாள். கிருஷ்ணா ரொம்ப ஆறுது...சீக்கிரம் வாங்களேன் சாப்பிட. கிருஷ்ணா... ம்ம். என்றான்...


ஒரு முக்கால் மணி நேரம் சிரிப்பும் கிண்டலும்மாக பேசிய பிறகு கிருஷ்ணா வந்தான். இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்..


இதையா சமைச்சே....?? இது கிருஷ்ணா..


நல்லா வந்திருக்குங்க.. உங்களுக்கு பிடிக்கலியா .. ஒரு வாய் சாப்பிட்டுட்டு சொல்லுங்களேன் .. இது நந்தினி...


கிருஷ்ணா இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே எழுந்து விட்டான்..


என்னங்க ரொம்ப ஆசையா பண்ணினேன்.. சுவை கூட நல்லா தாங்க இருக்கு! இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. எவ்வளவு டைம் ஆச்சி தெரியுமா இத செய்யறதுக்கு.. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை..


நந்தினிக்கு கிருஷ்ணா வைத்த மீதத்தை குப்பையில் கொட்ட மனசு வரவில்லை... அதையும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டாள்.. இப்படி சாப்பிட்டா நான் என்ன ஆகறது... நினைத்து கொண்டாள்...


சமையற்கட்டு வேலை எல்லாம் முடித்து கொண்டு வரும்போது கிருஷ்ணா லேப்டாப் இல் அலுவலக வேலையாக இருந்தான்... லஞ்ச் எப்படி இருந்துது.. ராணி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ... உங்களுக்கு பிடிசிதா ... ம்ம் என்றான்...பிடிகலையா??? நந்தினி கேட்டாள்.. ஓகே என்றான் கிருஷ்ணா... என்னங்க இப்படி சொல்லறீங்க... லஞ்ச் லே என் கூட சாப்பிட்டவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு தானே சொன்னாங்க...


அவங்க முன்ன பின்ன நல்லா சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டங்க... சொல்லிவிட்டு அவன் வேலையில் மூழ்கினான்...


நந்தினி நயன்தாரா, த்ரிஷா பற்றி பேசினாள்.. அடுத்த நாள் சமையல் பற்றி பேசினாள்.. அவன் தினத்தை பற்றி கேட்டாள்.. ஈழ தமிழர்கள் பற்றி பேசினாள்.. கிருஷ்ணாவின் பதில் என்னவோ ம்ம்...ம்ம்...ம்ம்.. தான்...



நந்திக்கு கோபம் வந்தது.. இவ்வளவு நேரம் உங்க நண்பன் கிட்ட அப்படி அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்க... இப்ப்போ என்னக்கு மட்டும் எல்லாத்துக்கும் ம்ம்.. சொல்லறீங்க... நான் எவ்வளவு நேரமா பேசறேன்.... கொஞ்ச நேரம் கத்தி பார்த்தாள்... கிருஷ்ணா பொறுமையாக திரும்பினான்... என்னக்கு வேலை இருக்கிறது டிச்டுர்ப் பண்ணதே...


நந்தினிக்கு அழுகையாக வந்தது... எல்லோரும் என்னை தைரியசாலின்னு சொல்லுவாங்க... நான் என் இப்படி அழறேன்.... போய் படுத்தால் தூக்கம் வரவில்லை.. மனது பாரமாக இருந்தது.... ரொம்ப நேரம் கழித்து கிருஷ்ணா வந்து படுத்தான்...


தான் மன வேதனை படுவதை கிருஷ்ணா விற்கு புரிய வைக்க வேண்டும்... சும்மா சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா???


கிருஷ்ணா...


ம்ம்..


எனக்கு கொஞ்சம் பேசணும்..


ம்ம்..


நீங்க என் எனக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் வேற யார்கிட்ட போய் பேசுவேன்... நீங்க இப்படி பண்றது என்னாலே வேற எதுலேயும் கவனம் செலுத்த முடியலே.. நான் ஏதாவது தப்பு செஞ்சா சொல்லுங்க நான் திருத்திக்கறேன்.. நான் உங்களுக்கு இந்த டாபிக் பிடிகலேன்னு அந்த டாபிக்..அந்த டாபிக் பிடிக்கலேன்னு இந்த டாபிக் மாத்தி மாத்தி பேசி பாக்றேன்... உங்க டீம் லே எல்லார்கிட்டயும் நல்லா தன் பேசறீங்க.. நண்பர்கள்கிட்ட நல்லா தன் பேசறீங்க... என்ன உங்களுக்கு பிடிக்கலியா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....அழுது கொண்டே திரும்பினால்... கிருஷ்ணா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்.....


அழுகை வரத்தான் செய்தது.. ஆற்றாமை தாளவில்லை... ஆனால் என்ன செய்ய.... எழுப்பி பார்க்கலாமா? பார்க்கலாம் ...


கிருஷ்ணா.. நான் பேசிட்டே இருக்கேன் நீங்க தூங்கிடீங்க .. நான் பேசறது கேக்கலியா?


என்னை தொந்தரவு பண்ணாதே ? நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா??? நாளைக்கி மோர்னிங் மீட்டிங் இருக்கு தூங்கலாம்னு பார்த்தா ... எப்போவும் நிம்மதியா கெடுக்கறதே வேலை...


இன்றைக்கு கிருஷ்ணா பேசிய நீளமான வாக்கியம் இதுதான்....


அழுதுகொண்டே தூங்கி விட்டாள் நந்தினி... அடுத்த நாளும் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே..!




Thursday, April 30, 2009

ஆமாம்..
இதுவும் கூட கடந்து விடும் தான்...
ஆனால்...
இது விட்டு சென்ற சுவடுகள்??
இது தீட்டி சென்ற வடுகள்??
-----------------
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை??
தெரியாது என்று தெரிந்தும்
ஏன் கழுதையிடம் கற்பூரத்தை கொடுக்க வேண்டும்?
-----------------